வலுவான பெருந்தோட்டத் துறைக்காக நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துங்கள் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் தமது சேவைக்காலம் முடிவடைந்து மீண்டும் நாட்டிற்குத் திரும்பிய பின்னர், அவர்களின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் முதலீடுகளுக்காக, செயற்திட்டச் சேவைகளுடன் கூடிய பயன்படுத்தப்படாத காணிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் 24.07.2026 அன்று இடம்பெற்ற, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள பெருந்தோட்டப் பிரிவு, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரிவு, அரச பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு உரிய நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான திட்டங்கள், அத்துடன் நிதி ஒதுக்கீட்டுத் தேவைகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், 1,081 மில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பெருந்தோட்டத் துறையின் பெருந்தோட்டக் காணிகளை அளவீடு செய்யும் திட்டம், தென்னை பயிர்ச்செய்கையின் நோய் கட்டுப்பாடு மற்றும் ஒழிப்புத் திட்டம், ‘கப்ருக’ நிதியம், தென்னை உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் வடக்கு தென்னை முக்கோணத் திட்டம் ஆகியவை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

பெருந்தோட்டத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, மலையக மக்களுக்காக 10,000 வீடுகளைக் நிர்மாணிக்கும் திட்டத்தை உரிய காலத்தில் நிறைவுசெய்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன் திட்டங்களின் கீழ் பெறப்படும் வேலைத்திட்டங்களை செயற்திறனாகவும் பயனுள்ளதாகவும் நடைமுறைப்படுத்தும் பொறிமுறையில் உள்ள சிக்கல்கள் காரணமாக, சில நிதி ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்படாமல் திரும்பிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

டித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தேயிலை, தென்னை மற்றும் இறப்பர் போன்ற பெருந்தோட்டப் பயிர்களை மீண்டும் பயிரிடுவதற்கான நிவாரணத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

தேயிலை, தென்னை, இறப்பர், முந்திரி மற்றும் பனை போன்ற பயிர்ச் செய்கைகளிலும், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிலும் கடந்த ஆண்டை விட இவ்வருடத்தில் வளர்ச்சியும் இலாபமும் ஈட்டப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம், குருணாகல் பெருந்தோட்ட நிறுவனம், சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம், இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, களுபோவிட்டியான தேயிலை தொழிற்சாலை நிறுவனம் ஆகிய 06 அரச பெருந்தோட்ட நிறுவனங்களும் விரைவாகத் தமது இலாபத்தை அதிகரித்து வருகின்றன என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டன.

தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயற்படுத்தப்படும் பயிர் உற்பத்தி மற்றும் அது சார்ந்த பயிர்களை மேம்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள், அதேபோல் சிறு தேயிலை தோட்டங்களில் மீண்டும் பயிரிடுவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்நாட்டின் தேயிலை செய்கையில் சுமார் 60,000 ஹெக்டெயார் சிறு தேயிலை தோட்டங்களாகும் என்றும், அச்சிறு தேயிலை தோட்டங்களில் மீண்டும் பயிரிடுவதற்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 450.06 மில்லியன் ரூபாவில், 155.07 மில்லியன் ரூபா இதுவரை செலவிடப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரவிக்கப்பட்டது.

சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 500 தேயிலை கிராமங்கள் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் ஆராய்ந்த ஜனாதிபதி, கிராமிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் “சமூக சக்தி” போன்ற ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்து அதன் பணிகளை விரைவாக முடிக்குமாறும் அறிவுறுத்தினார்.

இறப்பர் பயிர்ச்செய்கையை மீண்டும் ஊக்குவிப்பதற்காக இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 2026 வரவு செலவுத் திட்டத்தில் 137 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இறப்பர் மீள் பயிரிடுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் மற்றும் அதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தெங்கு கைத்தொழில் அபிவிருத்தி, தென்னை காணிகளின் உற்பத்தித்திறனை அதிகரித்தல், புதிய உற்பத்திகளை உருவாக்குதல் மற்றும் பெறுமதிசேர்த்தல் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பனை மற்றும் கித்துள் கைத்தொழில்களை வலுப்படுத்துவதற்காக பனை அபிவிருத்திச் சபை மற்றும் கித்துள் அபிவிருத்திச் சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது.

இந்நாட்டின் வருடாந்த முந்திரி தேவையான 25,000 மெட்ரிக் டொன்னில், 18,000 மெட்ரிக் டொன்னை இந்த ஆண்டில் பூர்த்தி செய்ய முடியும் என்றும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயர் வளர்ச்சியாகும் என்றும் இங்கு தெரவிக்கப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 15,000 ஹெக்டெயார் நிலப்பரப்பில் முந்திரி பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், பெருந்தோட்டத் துறையைப் வலுப்படுத்துவதற்காக நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் அரசுக்கு உரிய வர்த்தக நோக்கமற்ற நிறுவனங்கள் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது.

முந்தைய அரசாங்கங்களால் நிறுவனங்களுக்குக் காணிகளை வழங்கும் போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் காணிகள் தொடர்பாக பலமான ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது குறித்த நடவடிக்கைகளைக் கண்டறிவதற்காக நிதியமைச்சின் மூலம் குழுவொன்றை நியமிக்குப்படியும் அறிவுறுத்தினார்.

மேலும், தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் நடத்தப்படும் பாடநெறிகளைப் பல்கலைக்கழகங்கள் ஊடாக வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் கலந்துரையாடி ஆராயுமாறும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார்.

இந் நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அணில் ஜயந்த பெர்னாண்டோ, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க ஆகியோருடன், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் நாயகங்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects